Forum

Please or Register to create posts and topics.

சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ராசி 2020

மேஷ ராசி :சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.65/100

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.

இக்காலகட்டங்களில் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

கால புருஷனின் முதல் ராசியான மேஷ ராசிக்கு ,கால புருஷனுக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி அமர இருப்பதால் தொழில்துறையில் பெரிய அளவு மாற்றங்கள் உண்டாகும்.

பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக 12-ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 7ம்இடத்தையும் பார்ப்பார்.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள்.

ஜீவனத்திற்கு அடிப்படையே தொழில்தான்.

இங்கு கொடுக்கப்படும் பலன்கள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ,சனி எந்த இடத்தில் இருந்த போது ,என்ன மாதிரியான பலன்களை எனக்கு செய்தார் என்பதை அனுபவத்தின் வாயிலாகவும்,ஜாதகம் பார்க்கும் போது ஜாதகர் உணர்ந்ததையும் சேர்த்தே நேர்மையான பதிவாக கொடுக்கிறேன்.

என்னுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி வந்தபோது ,ஒரு மருந்து கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட 10 மாவட்டங்களுக்கு மேனேஜராக பணியாற்றியதால் ,காலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையான வேலை.பஸ்ஸிலேயே பயணம்.அலுப்பு.உடல் சோர்வு.

வேலை மட்டுமல்லாது டார்கெட் பிரஷர்.

வெளியூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீடு. மார்க்கெட்டிங்கில் இருந்தால் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது.

குதிரைக்கு கண்களை கட்டியது போல், ஒரு நேர்கொண்ட பார்வை மட்டுமே.

நித்தமும் நிம்மதி இல்லாத வாழ்க்கை.

மாத கடைசியான 25ஆம் தேதி வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை .கண்களில் ரத்தக் கண்ணீர் வரும்.உச்சகட்ட டார்கெட் பிரஷர்.

(மார்க்கெட்டிங்கில் உள்ள அனைவரும் இதை நன்கறிவர்.)

மேற்சொன்ன அமைப்பு முழுவதும், பத்தாமிடத்தில் சனி எனக்கு இருந்தபோது நடந்தது.

மற்றொரு ஜாதகத்தில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த airtelல் பணிபுரிந்த ஒருவர் ,Jio வரவினால் ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இது கடந்த சனிப்பெயர்ச்சியில் வந்த மீன ராசி நேயர் ஒருவரின் நிலை.

பொதுவாக பத்தாம் இடத்திற்கு சனி வரும்போது உடல் உழைப்பை அதிகப்படுத்தி ,ஓய்வறியாமல் உழைக்க வைப்பார்.

சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் குறையும் .கண்ணெதிரே ,

கைக்கு எட்டிய ஆர்டர்கள் கைவிட்டு போகும்.

பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அனுசரித்து செல்வது நல்லது.

எந்த தொழில் செய்தாலும் O T பார்க்க நேரிடும்.

புதிய தொழிலை அளவோடு முதலீடு செய்து துவங்குவது நல்லது. ஓனர் என்ற இறுமாப்போடு, உழைக்காமல் இருந்தால் , உண்டக்கட்டி கூட கிடைக்காது.

சனி இயற்கையில் பாவி.தொழில்காரகன். உடலுழைப்பை கடுமையாக கொடுப்பதில் வல்லவன்.

சொந்த தொழில் செய்பவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பணி செய்கிறீர்களோ அதற்கேற்ற பலனை சனிபகவான் நிச்சயம் கொடுப்பார்.

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 12ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் ,எவ்வளவு லாபம் வந்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு செலவாகி விடும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.

4-ஆம் இடமான சுக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

10ம் பார்வையால் ராசிக்கு ஏழாம் இடத்தை பார்ப்பதால் ,கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் ,கூட்டுத் தொழில் செய்பவர்கள்இடத்தில் , எச்சரிக்கையும் தேவை.

கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது என்பதால் அளவோடு குறைந்த அளவில் ,மிக நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் கடன் கொடுப்பது நல்லது.

பெண்கள் வீட்டு வேலைகளை சரியாக செய்வது நல்லது.

சனி பகவான் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் கிரகம் என்பதால் துவைப்பது ,சமைப்பது ,வீட்டை சுத்தமாக வைப்பது, என பெண்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்தால் கணவன்-மனைவிக்குள் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.

மாணவர்கள் பள்ளியில் பயிலும் பாடங்களை சேர்த்து வைக்காமல் அன்றன்றைய பாடங்களை அன்றே செய்வது நல்லது.

புதிதாக கல்லூரியில் படித்து முடித்தவர்கள் ,கிடைத்த வேலையை தற்போது ஏற்றுக் கொள்வது நலம்.பதவி உயர்வை எதிர் பார்க்க முடியாது.

அனுபவம் இல்லாமல் புது வேலையை தொடங்குவது தற்போது சரியில்லை என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் ,தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதுபோல் அனுபவமற்ற தொழில்களில் இறங்கி, ஆழம் பார்க்க வேண்டாம்.

மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

ஆயிரம் ,இரண்டாயிரம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக ,வேலை இடமாற்றம் தற்போது வேண்டாம்.

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை ஆகிவிடும்

உங்கள் சுய ஜாதகத்தில் சரியில்லாத தசாபுக்திகள் நடந்தால் ,கவுண்டமணி கடலில் இறங்கி கப்பலை தள்ளிய கதையாகிவிடும்.கவனம்.

இருப்பதை விட்டு ,பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

சிலருக்கு சுய ஜாதகத்தில் தசா புக்திகள் சரியில்லாமல் இருந்தால் பணி மாற்றமோ, பணியிடை நீக்கமோ, அல்லது பணி நீக்கமோ ஏற்படலாம்.

வெளிநாடு செல்வோர் நல்ல அனுபவம் வாய்ந்த ஏஜென்டுகளை அணுகி பணத்தை கொடுப்பது நல்லது.

பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் பணம் கொடுக்க வேண்டாம்.

மீறி் கொடுத்தால் பிடிக்காத வேலையை வேண்டாவெறுப்பாக செய்யும் நிலை ஏற்பட்டு ,விரைவில் வேலையை விட்டு தானே வெளியேறும் நிலை ஏற்படும்.

வயதானவர்கள் தங்கள் உடல்நிலையை கவனிப்பதோடு, தேவையான வேலைகளைத் தானே ஓரளவு செய்துகொள்வது நல்லது அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டாம்.

தற்போது குருவோடு சனி இணைந்து நீசபங்கம் மற்றும் சனி சுபத்துவம் அடைவதால் பிரச்சினைகள் இருந்தாலூம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும்.

செவ்வாயின் மூர்க்க குணத்தை கொண்ட கொண்ட மேஷ ராசிக்காரர்கள், எந்த சூழ்நிலையிலும் வேலையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இல்லையென்றால் வேலையில் விரக்தியின் விளிம்பிற்கே செல்லும் நிலை ஏற்படும்.

வேலையில் ஓபி அடிப்பவர்கள், வேலையில் தில்லுமுல்லு செய்பவர்கள், வரி கட்டாதவர்கள், கலப்படம் செய்யும் கயவர்கள் கையும் களவுமாக பிடிபட்டு களி தின்னும் நிலைமை ஏற்படும்.

இந்த காலகட்டங்களில் வேலைப்பார்க்கும் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.

உங்கள் சுய ஜாதக அமைப்பு சரியில்லை என்றால் வேலை பறிபோகும் நிலையும் ஏற்படும்.

கர்மகாரகன் சனி பத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் சிலருக்கு கர்மம் செய்யும் நிலையும் ஏற்படலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

சனியின் அதிபதியான கால பைரவர் மற்றும் அனுமனை வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும் .குலதெய்வ வழிபாடு குலம் காக்கும்.

தினசரி விநாயகரை வணங்கி விட்டு எந்த காரியம் செய்தாலும் வெற்றி உண்டு.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: