Forum

Please or Register to create posts and topics.

6, 8, 12 ஆம் இடங்களின் சுபத்துவ விஷயங்கள் என்னென்ன?

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்னாதிபதியை விட 6,12ஆம் அதிபதி வலுவாகி திசை நடத்தக்கூடாது.

அதேநேரத்தில் 8ம் அதிபதி ,ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் திசை நடைமுறையில் வரக்கூடாது.

8ம் அதிபதி வலுப்பெற்றால் மட்டுமே ஆயுளை தீர்க்கமாக கொடுக்கும் .

ஆனால் நடைமுறையில் அந்த திசை வந்தால் என்னென்ன எதிர்மறை அமைப்புகள் இருக்கோ, அத்தனையையும் ஒட்டுமொத்தமாக செய்யும்.

6-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் சனி, செவ்வாய் ,ராகு பார்க்கலாம் .சேரலாம்.

சனி ,செவ்வாய் ,ராகுவோ அல்லது சனி செவ்வாய் ,சனி ராகு, செவ்வாய் ராகுவும் இந்த இடத்தில் இருக்கலாம்.

ஆறாம் இடத்தின் பலனை நசித்து விடும்.

( விதிவிலக்கு மிதுன லக்கினத்திற்கு ஆறில் செவ்வாய் இருப்பது நல்லதல்ல)

ஒரு மனிதனுக்கு தேவையில்லாத விஷயங்கள் கடன் ,நோய் ,எதிரி. இந்த மூன்றும் எந்த ஒரு மனிதனும் விரும்பமாட்டான்.

ஆறாம் அதிபதி வலு குறைந்து மேற்சொன்ன கிரகங்கள் ஆறாமிடத்தில் இருந்தால் ,அந்த ஜாதகன் வாழ்நாள் முழுவதும் பெரிய அளவில் நோயால் கடனால் பாதிக்கப்பட மாட்டான்.

ஆறாம் இடம் என்பது ஆள் அடிமை ஸ்தானம். ஆறாம் அதிபதி ,பத்தாம் இடத்தில் இருக்கும் பொழுது நிரந்தரமாக ஒரே கம்பெனியில் முப்பது வருடம் பணியாற்றி ஓய்வு பெறும் அமைப்பையும் கொடுக்கும்.

சூரியன் ,செவ்வாய் ,பத்தாம் அதிபதியின் வலுவை பொறுத்து அரசாங்க வேலையா, தனியார் வேலையா என்பது அமையும்

( ஈட்டியை இறுக்க பிடித்து , ஆடாமல்,அசையாமல் ,ஆணி அடித்ததுபோல் ஒரே வேலை,ஒரே இடத்தில்)

ஆறாம் அதிபதி வலுவாகி , எந்த ஒரு சுப கிரகம் 6மிடத்தை ,நோக்கினாலும் கடன், நோய் ,எதிரியை அதனுடைய தசா புக்திகளில் கண்டிப்பாக கொடுக்கும்.

ஆறாம் அதிபதி வலுப்பெற்று லக்னாதிபதி ,நாலாம் அதிபதி பலம் குறைந்தால் நோயாலும்,

செவ்வாய் பலம் பெற்றால் எதிரியாலும், சனி வலுப்பெற்றால் நோயாலும், கடனாலும் அந்த திசையில் பாதிப்பு கண்டிப்பாக உண்டு.

சுப கிரகங்கள் ஆறாமிடத்தை எந்த விதத்திலும் நோக்கவே கூடாது. ஆறாம் இடத்தை பாவகிரகங்கள் தாராளமாக நோக்கலாம்.

ஆறாம் அதிபதியை விட இரண்டாம் அதிபதியும் ,11ஆம் அதிபதியும் வலுவாக இருந்தால் எளிதில் கடன் கிடைக்கும்.

கடன் வாங்கியாவது தன் கைகளில் பணம் புரளும்.

கடன் வாங்கினாலும் ,கடனை அடைக்க கூடிய அமைப்பும் உண்டாகும்.

அம்பானி போன்று கேட்டவுடன் கடன் கிடைப்பதும், மல்லையா போன்று மத்திய அரசிற்கே மகுடி வாசிப்பதும் இந்த அமைப்பே.

எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம்.

தான் இருக்கும் இடத்திலிருந்து மறைதல். (மறைபொருள்)

எட்டாம் அதிபதி வலுக்குறைந்து எட்டாம் அதிபதியையோ,8மிடத்தையோ சனி நோக்ககூடாது .சனி எட்டில் இருக்கலாம்.

சனி செவ்வாய் சேர்ந்து எட்டாம் அதிபதியை நோக்கவோ ,எட்டாம் இடத்தை பார்க்கக்கூடாது.

ஆயுள் பங்கம் உண்டு.

சனி தவிர எந்த கிரகமும் எட்டில் இருப்பது நல்லதல்ல .அதேநேரத்தில் லக்னத்திற்கு எட்டாம் அதிபதி ,எட்டாம் இடத்தில் இருந்து சுபகிரகங்கள் நோக்கலாம். ஆயுள் உண்டு.ஆனால் தசை நடைமுறையில் வரக்கூடாது.

எட்டில் சனி தவிர ,எந்த ஒரு கிரகமும் குறிப்பாக பாவ கிரகம் இருப்பது நல்லதல்ல. அப்படி இருக்கும் பொழுது சுபகிரக தொடர்பு ஏற்பட வேண்டும் அந்த மாதிரியான அமைப்பில் இருக்கும் பொழுது சிலருக்கு வெளிநாடு, வெளிமாநில வாழ்க்கையையோ அல்லது வெளியூர் வாழ்க்கையையோ கொடுக்கும்.

சிலர் மர்மமான வேலைகளில் ஈடுபடுவர் (சீக்ரெட் ஏஜென்ட் )போன்றவர்கள்.

தான் செய்யும் வேலை ,தன் மனைவிக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள் பவர்களும் இந்த மாதிரி அமைப்பு உடையவர்களே.

(ரகசிய உறவுகள் ,கள்ளக்காதலும் இந்த அமைப்பே .கணவனுக்கு தெரியாமல் மணிபர்சில் இருந்து மனைவி பணத்தை ஆட்டையை போட்டு ,ஒதுக்கி வைப்பதும் இது போன்ற அமைப்பு தான்)
மர்ம மனிதனாக , (Mystery man)மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளங்க முடியாத கவிதையாக இருப்பர்.

12ம் இடம் விரய ஸ்தானம்.

விரையங்கள் இருவகை உண்டு சுபவிரயம்,அசுபவிரயம் .

திருமணம் செய்வது ,படிக்கவைப்பது வீடு கட்டுவது போன்றவை சுபவிரயம்.

அடுத்தவரிடம் நம்பி கொடுத்த பணம் அபேஸ் ஆவது, வீட்டில் திருடு போவது, தொழிலில் நஷ்டம் ஏற்படுவது, மருத்துவமனைக்கோ, போலீக்கோ லட்சக்கணக்கில் கட்டி அழுவது போன்றவை அசுப விரயங்களாகும்.

பன்னிரண்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்கும்பொழுது சுப செலவிற்காக விரயங்கள் ஏற்படும்.

பன்னிரண்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்கும்பொழுது ,ஆறாம் இடத்தைப் பார்க்கும் என்பதால் கடன் வாங்கியாவது சுபச் செலவுகளை செய்ய வைக்கும்.

அது திருமணத்திற்காகவோ, படிப்பதற்காகவே( Educanational loan) ,வீடு கட்டவோ இருக்கலாம்.

பன்னிரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் பொழுது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே விரயத்தை கொடுக்கும்.

இங்கு ஒரு சுவாரசியம் உள்ளது.

பன்னிரண்டாம் இடத்தில் இருந்து, ஆறாம் இடத்தை பாவ கிரகங்கள் பார்க்கும் பொழுது ,கடன் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டாலும் ,அல்லது கடன் கொடுத்தவன் அதாவது மல்லையா போன்று ஆட்டையை போட்டாலும், செய்யும் செலவுகள் புட்டிக்கோ,

குட்டிக்குமாகத்தான் இருக்கும்.

ஒரு சுப நன்கொடையாக கூட இருக்காது.

அதாவது கடன் கிடைக்கும்,சொகுவான வழியில் செலவையும் கொடுக்கும்.கடைசியில் ஜுரோ.

சுருக்கமாகச் சொன்னால் கடைத்தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More