தன்னலமற்ற பொது சேவையில் அதிக நாட்டம் உடைய கடக ராசி நேயர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு ,அவமானம், அசிங்கம் போன்ற காரகங்களுக்கு ஆதிபத்தியம் பெற்று ஆறாம் இடத்திலே குருபகவான் ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று வலுவாக சஞ்சாரம் செய்து வந்தார்.
குருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2020
போதாக்குறைக்கு கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு ,அவமானம், அசிங்கம், கேவலம், கலகம்,சிறை போன்ற காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ள சனிபகவானும் மகரத்தில் ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்ததால், கடக ராசிக்காரர்கள் அவரவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல சனியின் பார்வையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.சிறு குழந்தைகள் அதிக குறும்பும், சேட்டையும் சொன்னபடி கேட்காமலும், பிடிவாதம் கொண்டும் அவர்கள் பெற்றோர் கடக ராசி குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறியதை நான் அனுபவத்தில் கண்டேன்.
அதற்கெல்லாம் காரணம் சனி பகவான் மகர ராசியில் இருந்து கடக ராசியை பார்ப்பதால் இது நிகழ்ந்தது. நாம் இப்போது குரு பெயர்ச்சியை பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் ஆண்டு கிரகங்களான சனி பகவான், குரு பகவான் ,ராகு கேதுக்கள் இவர்களையெல்லாம் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டியுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக மாணவர்கள் படிப்பில் கவனம் குறைந்து காணப்பட்டனர். அவர்கள் புத்தகத்தை கையில் எடுத்தாலே அவர்களுக்கு தூக்கம் வந்துவிடும். படிப்பை தவிர்த்து விளையாட்டு, செல்போன் டிவி நண்பர்கள் என்று படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி படிப்பில் கோட்டை விட்டனர்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண விஷயங்களில் பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும், தாமதத்தினையும் ஆறில் இருந்த குருபகவானும், இந்த மகரத்தில் இருந்த சனி பகவானும் தந்து வந்தனர்.
கடந்த ஒரு வருட காலமாக மத்திம வயதில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய வேலை, தொழில் போன்றவற்றில் சனி பகவானும் குரு பகவானும் பிரச்சனைகளை தந்து வந்தனர்.
வயதானவர்களுக்கு கடுமையான நோய் தொல்லைகளை ,ஆறில் உள்ள ஆட்சி பலம் பெற்ற குருவும் ,ஏழில் ஆட்சி பலம் பெற்ற சனியும் நோய்களை ஏற்படுத்தி படாதபாடு படுத்தி வந்ததை நான் எனது அனுபவத்தில் இந்த ஒரு வருட காலமாக கண்டு வந்தேன்.குறிப்பாக இந்த ஒரு வருட காலத்தில் கடக ராசிக்காரர்களும் மகர ராசிக்காரர்களும் அதிகம் என்னிடம் ஜாதகம் பார்த்து வந்தனர். ஏனென்றால் பிரச்சனைகளை அதிகம் சந்தித்தது அவர்கள் தான். போன வருடம் குருபகவான் ஆறில் வந்தவுடன் கடன் வாங்க வைத்தார். நோய் தொந்தரவுகளை அளித்தார்.
தசா புத்தி சரியில்லாதவர்களுக்கு,6,8,12 ம் அதிபதிகளின் தசை அல்லது புக்தி நடந்தவர்களுக்கு சிறை அல்லது ஜென்மம் என்று சொல்லக்கூடிய ஒரு 10க்கு 10 ரூமில் தனிமைப்படுத்தி ஜெயில் மாதிரியான ஒரு அமைப்பில் இந்த ஆறாம் இடத்தில் இந்த குரு பகவானும் , மகரத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி பகவானும் தந்து வந்தனர்.
ஏன்னா? அட்டமாதிபதியும், ஆறாம் அதிபதியும் வலுத்தால் என்ன நடக்கும்?
வரக்கூடிய கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி சரியான ஆங்கிலம் 20 .11 .2020 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான தனுசு ராசியிலிருந்து 7-ம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி உங்கள் ராசியை பார்த்து கொண்டிருக்கும் மிக அருமையான அமைப்பு வரப்போகிறது.
குருபதி ஏழில் நிற்க புனிதன் கீர்த்தி என்று சொல்லு. பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். அதுமட்டுமின்றி குருபகவான் சனியுடன் இணைந்து சனியை புனிதப்படுத்துவதால் சனியின் பார்வையால் பெருமளவில் கெடுபலன்கள் இருக்காது. குருபகவான் உங்கள் ராசியை பார்த்து விடுவதால் உங்களுக்கு வரக்கூடிய அத்தனை தொல்லைகளையும் விலக்கிவிடுவார். சூரியனை கண்ட பனிபோல அத்துணை துன்பங்களும் குருவின் பார்வையால் தவிடு பொடியாகும். திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் ஆகும்.
குருபகவான் ஐந்தாம் பார்வையால் பதினொன்றாம் இடத்தை பார்த்து விடுவதால் முதல் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு முறைப்படி பிரிந்து இரண்டாம் வாழ்க்கைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் கடகராசிக்காரர்களுக்கு இரண்டாம் திருமணம் நல்ல படியாக நடந்து நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால், குருபகவான் உங்களுக்கு பல சகாயங்களை தருவார்.
மூன்றாம் இடம் போக ஸ்தானம் என்பதால் இந்த இடத்தை குருபகவான் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சிக்கு, சந்தோஷத்திற்கு குறை ஒன்றும் இல்லை.
குரு பதினொன்று,ஏழு, ஒன்பான், கூறும் ஐந்து, இரண்டில் நிற்க;
திருமகள் கடாட்சம் உண்டாகும்;
அதாவது லட்சுமி கடாட்சம் உண்டாகும்;
தீர்த்த யாத்திரை உண்டாகும்;
சுபகாரியங்கள் உண்டாகும்;
மேலிடத்து அனுகூலம் உண்டாகும்;
அரசாங்க உதவி உண்டாகும்;
தாய்,தந்தை உதவிகள் உண்டாகும்;
அருமையோடு பெருமையும் உண்டாகும்;
என்ற செய்யுளின் படி திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும், திருமணம் இனிதே நடந்து விடும். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குருபகவானின் கடாட்சத்தால் புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் கூடும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தாய் தந்தை உதவிகள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும்.
அரசாங்க உதவி கிடைக்கும். பேங்க்ல கேட்டவுடன் கடன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஏழாமிடத்து குருபகவானால் நன்மைகள் அனேகம் உண்டு. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையும் ராசிகளுல் கடகராசியும் ஒன்று.
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2020
இதுவரை 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவான் கடந்த 23 .9. 2020 அன்று முதல் உங்கள் ராசிக்கு 11ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி சஞ்சாரம் செய்து வருகிறார். இது ராகு பகவானுக்கு மிகவும் உகந்த இடம். மிகவும் பிடித்தமான இடம் .இங்கே இருக்கும் ராகு பகவானுக்கு 20 . 11 .2020 முதல் குரு பகவானின் அருட்பார்வை கிடைக்க இருப்பதால் இங்கே இருக்கும் ராகு வேற்று மதம், வேற்றுஇனம், வேற்று நாட்டினர் இவர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்க அருள்புரிவார்.
இரண்டாம் திருமணத்திற்கு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இரண்டாம் திருமணத்தை ராகு பகவான் ஏற்படுத்தித் தருவார்.குருபகவான் மற்றும் ராகு பகவானால் பண வரவுகள் திருப்தியாக, நன்றாக இருக்கும்.”ராகுவை போல கொடுப்பாரும் இல்லை “என்ற பழமொழி கடக ராசிக்காரர்களுக்கு ,இன்னுமொரு ஒன்றரை வருடங்களுக்கு ரொம்பவும் பொருந்தும்.ஏன்னா ரிஷப ராசி ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசி. குருபார்வை வேறு ராகு பகவானுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு அவர் நீசம் பெறுகிறார்.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட பழமொழிக்கு ஏற்றவாறு இங்கே இருக்கும் ராகு ராஜ யோகத்தை தருவார என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதற்கு ஆப்போசிட்டாக இதுவரை ஆறாமிடத்தில் இருந்து மிக மிக நல்ல பலன்களை வாரி வழங்கிவந்த கேது பகவான் திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு 23.9.2020 அன்று பெயர்ச்சியாகி குழந்தைகள் வழியில் பல சோதனைகளை தர காத்திருக்கிறார்.
பூர்வசொத்தில் பல பிரச்சனைகளுக்கு கேது காரணமாக இருக்கப்போகிறார்.இடம்,பொருள், வீடு வாங்குவதற்கு கேது முட்டுக்கட்டைகளை, தடைகளை தருவார். கேது பகவான் ஐந்தில் இருப்பதாலும், குருபகவான் நீசம் பெற்று இருப்பதாலும் குழந்தைகள் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் அக்கறை தேவை. கேது பகவானுக்கு உண்டான முறைப்படியான பரிகாரங்களை செய்து கொள்ள கேதுவால் வரக்கூடிய தொல்லைகள் விலகும்.
உங்களுக்கு பரிகாரமாக காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ,அங்காள பரமேஸ்வரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போன்ற தாயுள்ளம் கொண்ட அன்னைக்கு வெள்ளை கலரில் மாலை சாற்றுவது, வெண்பட்டு எடுத்து சாற்றுவது, ஐந்து வகையான கனி வர்க்கங்களை படைப்பது, கல்கண்டு பொங்கல் நிவேதனம் செய்வது, பசுமாட்டு நெய் கிடைத்தால் தாமரை நூலினால் 2 நெய்விளக்கு போட்டு வர குருபகவான், மற்றும் ராகு பகவானால் வரக் கூடிய நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.