மகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

2,754

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும்,ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் மகர ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

மகர ராசிக்கு சனிபகவான் தற்போது 12ம் இடத்தில் இருந்து 1ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

1ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -3ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 10ம்இடத்தையும் பார்ப்பார்.

மகர ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. மிக மிக மிக எச்சரிக்கையாக இருக்கக்கூடிய காலகட்டம் இது.

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லக்கூடிய காலகட்டம் மிகவும் சோதனையான காலகட்டம் என்பதால் அதற்கேற்ற தக்க பரிகார முறைகளையும் வழிபாட்டு முறைகளையும் செய்து கொள்வது நல்லது.

தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். புதிய தொழில் ஆரம்பிக்கும் வேண்டாம்.

வேலை பார்ப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேல் அதிகாரிகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

சிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் இந்த காலகட்டங்களில் விரைத்துக்கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

கடன் வாங்கி கடனை அடைப்பது, ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடவே கூடாது.

பெண்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். வேலியில் போகும் ஓணானை வீட்டுக்குள் தானாகத் தேடி அழைத்து வர வேண்டாம்.

மிஸ்டு காலில் ஏற்படும் பழக்கம் குடும்பத்திலிருந்து மிஸ் ஆக்கிவிடும். கவனம்.

பெண்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.

பெண்களும் ஆண்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் கொஞ்சம் ,கொஞ்சமாக புற்று நோய்போல் பரவி உயிருக்கு உலை வைத்துவிடும் அல்லது ஊரில் அவமானப்படும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

சனியின் வேலையே ,ஒருவனுடைய ஆசையை தூண்டி ,அதனால் அலைக்கழிக்க வைப்பது ஆகும்.

மாட்டினீங்கனா சிக்கி சின்னாபின்னமாகி விடுவீங்க.

சூதானமா இருக்கணும் அப்பு. சொல்லி புட்டேன். இல்லன்னா சோத்துக்கு லாட்டரி அடிக்க விட்டுரும்.

பிரச்சனை எந்த வடிவில் வருகிறது என்பதே தெரியாது என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

கணவன் ,மனைவி உறவில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வண்டி வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவும். ரேஸ் போனீங்கன்னா ஜூஸ் ஆயிருவீங்க பார்த்துக்குங்க.

இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு சொத்து பிரச்சினைகள், வீடுவாசல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.

வண்டி வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படும். முறையாக பராமரித்து கொள்வது நல்லது.

பருவ வயதில் இருக்கும் மாணவர்கள் மாணவிகள் புதிய நண்பர்களின் சேர்க்கையால் பாதை மாறலாம் என்பதால் அவர்களின் பெற்றோர் கவனமுடனிருப்பது நல்லது.

மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றன்றே முடித்து விடுவது நல்லது.

சோம்பல் சாம்பலாக்கி விடும்.

மாணவ-மாணவிகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கவனமுடன் பெற்றோர் கண்காணியுங்கள் .பாதை மாறும் நேரம் இது.

மாணவ-மாணவிகளின் நடைமுறை வாழ்க்கையில் வித்தியாசம் தெரிந்தால் கண்டிப்புடன் கண்டியுங்கள். நல்லது கெட்டதை தீர்க்கமாகச் சொல்லிக்கொடுங்கள்.

குறிப்பாக பருவ வயதில் இருக்கும் பெண்கள் ,ஆண் நண்பர்களிடம் கடலை கருகும் அளவிற்கு கடலை போட்டால் கைப்பிள்ளை போல் காணாமல் போய்விடுவீர்கள் என பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

மகர ராசியை பொறுத்தவரை அடுத்த வரும் இரண்டு இரண்டரை வருடம் நித்திய கண்டம் பூரண ஆயிசு என்பதால் நீங்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும்.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை ஆன மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக்கொள்வது நல்லது.

மேலே உள்ள கோட்சாரத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் மோசமான திசா புத்திகள் நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக விழிப்புணர்வு தேவை.

சிலருக்கு திருமணம் ஆனாலும், வேலை சார்ந்தோ மற்ற விஷயங்களினாலோ சற்று பிரிந்திருக்க நேரிடும். குழந்தை பாக்கியமும் ஏற்படும்.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது.

தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்:

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களிலும் கவனம் தேவை.

குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.

கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

மார்க்கண்டேயன் சிவனை கட்டியணைத்தது போல் உங்கள் குலதெய்வத்தை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

தினசரி விநாயகரை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்க வேண்டாம்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் அருகில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்த பிறகு அங்கு தனி சன்னதியில் இருக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வரவும்.

அன்று மாலை அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் செய்து கொள்ளவும்.

சரி ஸ்ரீராமஜெயம் சொல்லி எழுதி வாருங்கள். எந்த பிரச்சினையும் வராது

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More