நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
மிதுன ராசிக்கு சனிபகவான் தற்போது ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு அஷ்டம சனியாக வந்துள்ளார்.
8ம் இடத்தில் அட்டம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி, அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக 11-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 6ம்இடத்தையும் பார்ப்பார்.
அஷ்டம சனி
அஷ்டமசனி ஆம், என்னுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது அஷ்டமசனி காலகட்டம்தான்.
சனி என்பவர் யார்? அவரின் பலம் என்ன? என்பதை புரிய வைத்த காலம் அஷ்டம சனி காலகட்டமே.
அஷ்டமச்சனி காலகட்டங்களில் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜோதிடரிடம் ஓடும் நிலை ஏற்படும்.
எச்சரிக்கை, கவனம், Beware, caution என எந்த மொழியில் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி. கவனமான காலகட்டம்.
அட்டம சனியில் தொட்டது துலங்காது என்பதால் எதிலும் மிக மிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வருமுன் காப்பதே சிறந்தது.
வயதுக்கு ஏற்றபடி அஷ்டமசனி அதன் பலனை தவறாமல் கொடுக்கும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடுமையான காலகட்டம் அட்டம சனி என்றால் அது மிகையாகாது.
தொழில் துறையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் கண்டிப்பாக உண்டு. அதனால் நற்பலன்கள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை.
தற்போதும் பிரமோஷன், போனஸ் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.
அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படாமல் வாழ கற்றுக் கொள்வது தற்போது நலம் பயக்கும்.
அதனால் விரைத்து கொண்டு சொந்த தொழில் ஆரம்பிக்கிறேன் என்ற பெயரில் புது முதலீடுகளைத் கண்டிப்பாக தொடங்க வேண்டாம்.
தொழிலை விரிவாக்கவும் வேண்டாம்.
கடன் வாங்கி கடனை அடைப்பது, ஜாமீன் போடுவது போன்ற செய்கைகளை செய்தால் கண்டிப்பாக நீங்கள் தான் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்.
கடன் அதிகமாக வாங்குவதும், கொடுப்பதும் வேண்டாம். இரண்டுமே பிரச்சனை தான். உங்கள் சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் இருக்கும் இருப்பின் அஷ்டமச்சனி காலகட்டங்களில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது.
மாணவர்கள் பள்ளியில் நடத்தும் பாடங்களை ,சோம்பேறித்தனம் படாமல் அன்றன்றே முடித்து படித்துக் கொள்வது நல்லது.
பருவ வயதில் உள்ள மாணவர்களுக்கு காதல் என்ற பெயரில் கண்ணீர் ஏற்படும் நிலை உள்ளதால், கல்வியைப் புறம்தள்ளி ,காதலில் சிக்கினால் கம்பி நீட்டி விடுவாள் உங்கள் உத்தம பத்தினி.
அஷ்டம சனியில் யாரையும் நம்ப வேண்டாம்.
சனி, சுக்கிரன், ராகு திசைகள் அசுப நிலையிலிருந்து அட்டமச் சனி நடைபெறும் பொழுது தேவையற்ற போதை பழக்கங்களுக்கு ஆட்படலாம் என்பதால் எதிலும் கவனம் தேவை.
அசுப நிலையில் சனி, ராகு திசை 8-க்குடைய திசை நடந்து, அட்டமச் சனி நடக்கும் போது பைக் ரேஸில் ஈடுபடுகிறேன் என வண்டி வாகனங்களில் வேகமாக சென்றால் அண்ணனுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிஷன் உண்டு.
100ல் போனால் 108 உடனே வந்துவிடும்.
பருவ வயதில் உள்ள பெண்கள் தன் தகுதிக்கு ஒவ்வாத நபருடன் காதல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
காதல் என்ற பெயரில் காமமும் அரங்கேறலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. இல்லையென்றால் கண்ணீர் சிந்த நேரிடும்.
இந்த காலகட்டங்களில் குலுக்கல் சீட்டு, ஏல சீட்டு நடத்துபவர்கள் கவனமுடனிருப்பது நல்லது.
சிலர் வேலைக்காக ஒரு வருடம், இரண்டு வருடம் என அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு சர்டிபிகேட் போன்றவற்றை அடமானம் வைப்பது கண்டிப்பாக கூடாது.
வேலியில் போகும் ஓணான் வேட்டிக்குள் ஏறும் என்பதால் கூடாநட்புகளை தவிர்ப்பது நல்லது.
மிஸ்டுகாலில் தொடங்கும் நட்பு, சிலருக்கு கள்ளக்காதலில் முடிந்து, கணவரால் கட்டையில் ஏற்படும் நிலையும் ஏற்படலாம். கவனம்.
அழையா விருந்தாளிகள் “அணைத்து” அழைப்பதில் அல்லல் உண்டு என்பதை அறவே மறக்க வேண்டாம்.
உங்கள் சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்து, அட்டமச் சனி நடக்கும் காலகட்டங்களில் கணவன்-மனைவிக்கிடையே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
தன் தகுதிக்கு மீறிய செயலை ஆரம்பித்து அவஸ்தைப்பட வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு இப்பொழுது சிறப்புடன் வாழ்வது நல்லது.
உடல்நிலையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும் என்பதால் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை செய்துகொள்வது நல்லது.
சிறுகுழந்தைகள் இருக்குமிடத்தில் தீப்பெட்டி, கத்தி, எளிதில் விழுங்கக் கூடிய சிறு பொருள்கள், மின்சாதனங்களை உயரத்தில் எட்டாதவாறு வைப்பது நல்லது.
எந்த வேலையில் இருந்தாலும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பதே நல்லது.
வீட்டில் இருக்கும் தங்க நகைகள், பணம் போன்றவற்றை பாதுகாப்பாக வங்கியில் வைப்பது நல்லது.
இரண்டாம் தர தொழில் செய்வோர் கவனமுடனிருப்பது நல்லது .சரியாக வரி செலுத்தி, வணிகக் வணிகத்தை தொடர்ந்தால் வம்பு இல்லாமல் வாழ்க்கை ஓடும்.
சூதாட்டம், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்கள் எதிலும் அதிக முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. ஆசை காட்டி மோசம் செய்து விடும் .
2020 வரை குரு 7ம்இடத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் பிரச்சினைகளோடு இருந்தாலும் வாழ்க்கை ஓரளவு ஓடிவிடும்
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தந்தை மகன் உறவு பாதிக்கக்கூடும்.
01 -01 – 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் கெடு பலன் குறையும்.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
இந்த காலகட்டத்தில் வேலையில் சற்று நிம்மதி ஏற்பட்டாலும் தொழில் முடக்கம், சுணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டு விலகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று இளைப்பாறும் நேரம் இது.பணிச்சுமை குறையும்.
மேற்சொன்ன பலன்கள் பொதுப்பலன்கள். உங்கள் சுய ஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடந்தால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் அசுப திசைகள் 6 ,8 ,12-க்குடைய திசைகள், பாவத் தன்மை பெற்ற ராகு, சனி திசைகள் நடந்து அட்டமச் சனி நடக்கும் போது நிச்சயமாக 1000% எச்சரிக்கை தேவை.
என்னடா ஒரே அட்வைஸ் ஆக இருக்கிறது என்று என்ன வேண்டாம் உங்கள் நலனுக்காகவே இப்பதிவு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
இதைப்படிக்கும் அஷ்டம சனியை கடந்து வந்த ரிஷப ராசி அன்பர்கள் உங்கள் கடந்த கால அனுபவங்களை கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய