மகர ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

ராசி கட்டத்தில் பத்தாவது ராசியான மகர ராசி நேயர்கள், சனியை ராசிநாதனாக கொண்டவர்கள்.. இதன் சின்னம்.. கடல்குதிரை என்னும் மகரமீன் ஆகும்.. எனவே இவர்கள் மிகவும் அழுத்தமானவர்கள்… கடலின் ஆழத்தை கூட கண்டுபிடித்து விடலாம் .ஆனால் இவர்களின் மனதிற்குள் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.. இவர்களிடம் ரகசியம் தங்கும். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் சொல்லலாம். ஒரு சிலர் என்னிடம் சொல்வதுண்டு.. இந்த மனிதனை கட்டி எட்டு வருஷம் ஆகுது.. ஆனா இந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.. இந்த மனுசனுக்கு பாசம் இருக்குதா? அல்லது இல்லையானே தெரியல, அப்படின்னு நிறைய பெண்கள் புலம்புவதை கேட்கலாம்.. அவர்களின் கணவன்மார்கள் மகர ராசிக்காரர்களாக பெரும்பாலானவர்கள் இருப்பார்கள்.

கடுமையாக உழைத்துப் பிழைப்பார்கள்…
கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்.. சனி ஆன்மிக கிரகம் என்பதால் ஆன்மிகத்தில் இவர்களுக்கு அதிக நாட்டம் உண்டு. யாரையும் அவ்வளவு சீக்கிரம் எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.. சனீஸ்வர பகவானின் ராசி என்பதால் தற்பெருமை இயல்பாகவே இருக்கும்.. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் அப்படிங்கற மாதிரி, வேலைன்னு வந்துட்டா கடுமையாக உழைப்பதற்கு தயங்கவே மாட்டார்கள்.
பெரும்பாலும் உடல் உழைப்பால் பிழைப்பவர்கள்..

வைராக்கியம் மிகுந்தவர்கள் ..தனக்கு ஒரு கெடுதல் செய்தவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருந்து, பழிக்குப் பழி வாங்காமல் ஓய மாட்டார்கள்.. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் என்ற கொள்கை உடையவர்கள்… அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்… இது எல்லாம் பொதுப்பலன்கள் தான்… ஜாதகத்தில் கிரகங்களின் இணைவு மற்றும் சேர்க்கையை கொண்டு பலன்கள் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும்.

இதுவரை உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்து விரயச் சனியாக கடுமையான விரயங்களை தந்து வந்த சனீஸ்வர பகவான் 24. 1. 2020 முதல் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.. இது ஜென்மச் சனி காலம் என்று அழைக்கப்படும்.. செய்யுள் என்ன சொல்லுது அப்படின்னா

“பன்னிரண்டு, ஏழு,எட்டு, ஒன்பான,பத்து ,ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்றில், சனியனே இருந்தால், நட்டம், தனம், உயிர் சேதம் ஆகும். தனிச் சிறை, மானபங்கம், தன் அறிவாலே மோசம். மனை விட்டு,மாடிவிட்டு மறுநகரம் ஏறுவானே”

இது ரொம்ப எளிமையான செய்யுள்.எல்லா பஞ்சாங்கங்களிலும் இருக்கக்கூடிய மிக எளிமையான செய்யுள். எனக்கு ஏழரைச் சனி நடக்கும்போது ஊருக்குள்ள இருந்து தோட்டத்துக்கு குடி போனேன்.. அஷ்டம சனி நடக்கும் போது தோட்டத்திலிருந்து ஊருக்குள் குடி வந்துவிட்டேன்.. இடமாற்றம் கண்டிப்பாக இருந்தே தீரும்.. ஒரு நாலு வீடு தள்ளி அல்லது நாலு தெரு தள்ளி அல்லது ஊரு விட்டு ஊரு, நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் போய் ஏழரைச் சனி பிழைக்க வைக்கிறது.

மகர ராசிக்கு, உங்கள் ராசிக்குள் சனி வருகிறார். அப்படி வரக்கூடிய சனி உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெறுகிறார் .உங்கள் ராசியில் ராசிநாதன் வலுவாக சொந்த வீட்டில் இருக்கக்கூடிய அமைப்பு உங்களுக்கு ஒரு பலத்தை தந்துவிடுகிறது. சனி உங்கள் ராசிநாதன் என்பதால் ஏழரைச்சனி பெரிய அளவில் பாதிக்காது.. ஏழரைச் சனி அஷ்டமச்சனி மேச ,கடக ,சிம்ம ,விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே கடுமையான கெடு பலன்களைச் செய்யும்..

ஏனென்றால் மேஷம், கடகம் ,சிம்மம், விருச்சிக ராசி நாதர்களாகிய சூரிய ,சந்திர ,செவ்வாய் மூவரும் சனிக்கு கடும் பகைவர்களாக வருவார்கள்.. அந்த ராசிக்காரர்களை சனி தனது ஜென்ம விரோதிகளாக நினைத்து கடுமையான கெடுபலன்களை தருகிறார்.. உங்கள் ராசிக்கு உங்கள் ராசிநாதன் சனி என்பதால், உங்களை சனி பெரிய அளவில் கெடுக்க மாட்டார்..

உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி யான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் சனி செல்லும்போது மட்டுமே கொஞ்சம் மனக் குழப்பத்தையும் ,மனச்சஞ்சலத்தையும் அரசு மற்றும் தந்தைவழியில் தொல்லைகள், அரசு அதிகாரிகள் பகை போன்ற சாதகமற்ற பலன்கள் இருக்கும்.
உங்கள் ராசிநாதன் சனி என்பதால் விரயங்கள் சுப விரயங்களாக இருக்கும்..

அதேமாதிரி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவோணம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, சஞ்சாரம் செய்யும்போது மனக்குழப்பங்கள், மனசஞ்சலங்கள் இருந்தே தீரும்.. திருவோணம் நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தில் சிலருக்கு திருமணம் சார்ந்த பிரச்சினைகளில் நன்மைகளும் ஆதாயங்களும் இருக்கும். ஆனால் என்ன அலைச்சலின் பேரில் நடந்தேதீரும். அதேமாதிரி அவிட்டம் நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது சகோதர வழியாக லாபங்களும், சுபகாரியங்களும், தாராளமான பணவரவுகளும் இருக்கும்.ஏனென்றால் அப்போது குரு உங்களுக்கு சாதகமான இடமான இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்வார் என்பதால் குரு பலத்தால் அனைத்து பிரச்னைகளும் நீங்கிவிடும்.அதுமட்டும் அல்லாமல் செவ்வாய் உங்கள் வீட்டின் உச்சாதிபதி என்பதால் செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம் மிக அருமையான ஒரு பொற்காலம் என்றே அழைக்கலாம்.

பொதுவாக இந்த ஏழரைச்சனி காலகட்டத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது, புதிய தொழில் முயற்சிகள் செய்யாமலிருப்பது, யாருக்கும் ஜாமீன் கொடுக்காமல், இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது..

உங்கள் ராசியில் சனி சஞ்சாரம் செய்வதால் மருத்துவச் செலவுகள் இருந்தாலும் ,ராசிநாதன் வலுவாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும்.. கடன் வாங்க வேண்டிய தேவை இருந்தாலும் உங்கள் ராசிநாதன் வலுவாக இருப்பதால் கடனை திருப்பிச் செலுத்த முடியும் .நோய் வந்தாலும் ராசிநாதனின் பலத்தால் நோய் தீர்ந்துவிடும்.. கோர்ட் கேஸ், வம்பு ,வழக்கு எதுவந்தாலும் ராசிநாதனின் பலத்தால் எளிதாக சமாளித்து விடுவீர்கள்..

வருமானத்துக்குள் செலவு செய்து, பட்ஜெட் போட்டு வாழ்ந்து வர ,கடன் பிரச்சனையில் இருந்து தப்பித்து விடலாம்.. கணவன்-மனைவிக்குள் பிரச்சனை வந்து பின் சரியாகிவிடும்..
திருமணம் போன்ற சுப காரியங்கள் கடுமையான இழுபறிக்கு பின் நடந்தேறும்.. கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தொழிலில் அதிக முதலீடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குரு பகவான் 12ஆம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தை பார்ப்பதால் 12, 8 ம்மிடங்கள் சுபத்தன்மை அடைவதால் சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் ..ஏழரைச் சனியில் தான்எல்லோரும் வெளிநாடு போவாங்க.. குருபகவான் நான்காம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் ராசிநாதன் பலமாக இருப்பதால் சிலருக்கு சொந்த வீடு அமைந்து விடும் இன்னும் சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து ஒத்தி வீட்டுக்கு சென்று விடுவார்கள். இன்னும் சிலர் வசதியான வீட்டுக்கு சென்றுவிடுவர்.

23. 9 .2020 க்கு மேல் கேது லாபஸ்தானத்தில் வந்து உங்களுக்கு லாப மேன்மைகளை தர ஆரம்பித்து விடுவார்.. நவம்பர 2020 க்கு பிறகு, நவம்பர் மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு வந்து அவரும் நல்ல பலன்களை செய்ய ஆரம்பித்துவிடுவார். இப்போது இருக்கும் 12-ஆம் இடத்தை காட்டிலும் மகரத்தில் குரு இருப்பது ரொம்பவே மேலான நல்ல பலன்களை தரும்.

உங்கள் ராசிநாதன் என்பதால் சனியின் பார்வைகள் நல்ல பலன்களையே செய்யும்.. பத்தாம் வீட்டை தனது உச்ச வீட்டை சனி பார்ப்பதால் தொழில்,ஜீவன வகையில் எந்த பிரச்சினையும் இல்லை .தொழில் சிறக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். ஆனால் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு பிடிவாதம் இந்த இரண்டரை வருட காலத்தில் அதிகமாக இருக்கும் . யாருடனும் ஒத்துப் போகாத குணம் இருக்கும்..யார் பேச்சையும் கேட்க மாட்டீர்கள்.. வேலை செய்யும் இடங்களிலும், குடும்பத்திலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது.. முக்கியமாக மேலதிகாரியிடம் கொஞ்சம் நிதானமாகப் பேசுவது ரொம்ப நல்லது.

வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.. விலை உயர்ந்த பொருட்களை உங்கள் பாதுகாப்பில் பத்திரமாக வைத்துக் கொள்ளவும் ‌. காலேஜ் படிக்கும் பெண்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.. காதல் மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டால் அது எதிர்காலத்தில் பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும்.காதல் தோல்வி ஏற்படும்.அதனால் கடுமையான மன அழுத்தத்தை தரும்.

படிக்கிற பிள்ளைகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. அரசியல் வாதிகள் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக பாடுபட வேண்டும்.
மக்களிடம் செல்வாக்கு குறைந்து காணப்படும்.. உள்கட்சி பூசல்,உள்ளடி வேலைகளால் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். விவசாயிகள் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிவரும்.மகசூல் குறையும்.. இந்த வருடம் இறுதியில் இருந்து லாபம் வரத்தொடங்கும்.கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு வேலைபளு கூடும்.மொத்தத்தில் மகர ராசியினர் ராசி நாதனின் ஆட்சி பலத்தால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்…

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More