தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

5,260

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் தனுசு ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

தனுசு ராசிக்கு சனிபகவான் தற்போது 1ம் இடத்தில் இருந்து 2ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

2ம் இடத்தில் தன் சொந்த வீட்டில், ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -4ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 11ம்இடத்தையும் பார்ப்பார்.

தனுசு ராசிக்கு இது நாள் வரை கடுமையான அவதியைக் கொடுத்த ஜென்ம சனி விலகுவதே ஒரு பெரிய ஆறுதல் தான்.

அதேநேரத்தில் தனுசு ராசிக்கு ஏழரை சனி இன்னும் முழுமையாக விலகவில்லை.

ஜென்ம சனி காலகட்டத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த, தனுசு ராசிக்காரர்களுக்கு இனி விடிவு பிறக்கும்.

ராசியில் இருந்த சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையால், பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்த்ததால் இந்த காலகட்டங்களில் தொழிலில் கடுமையான முடக்கம் ஏற்பட்டிருக்கும்.

தொழில் நடந்தால்தானே இலாபம். லாபம் கிடைத்தால் தானே மற்ற விஷயங்களை சாதிக்க முடியும்.

அதே நேரத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி இருப்பதால் இக்காலகட்டங்களில் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

குடும்பத்திலும் சிறு சிறு விஷயங்களுக்காக கோபப்பட்டு எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

நமக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்ய வேண்டாம். சனி வாக்கு ஸ்தானத்தில் உள்ளதால் கலகத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

சிலருக்கு சொத்து பிரச்சனையும், சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு செல்லும் நிலைமையும் ஏற்படும்.

உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

சனி ஏழாம் பார்வையால் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு தாங்கமுடியாத மன அழுத்தம் , விபத்து ,கோர்ட் கேஸ் என நடக்கும் காலம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தியானம் கடைபிடிப்பது நல்லது.

குறிப்பாக அடுத்தவர்களுக்கு ஜாமீன் போட வேண்டாம்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனி இன்னும் உங்களை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதால் எச்சரிக்கை தேவை.

பாதச் சனி நடப்பதால் சிலருக்கு கால் மூட்டு வலி ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்வோர் கவனமுடன் வண்டியை இயக்குவது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். படிப்பிற்கேற்ற வேலை கிடைத்தாலும், வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

குடும்ப பெண்கள் கோள் மூட்டுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

வாக்கில் சனி. வாயை கிழித்துவிடும். கவனம்.

எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் தனஸ்தானத்தில் சனி இருப்பதால் சேமிக்க முடியாது.

வரவு வந்தால் தேவையற்ற செலவுகளும் உடனே தானாக தேடி வரும்.

திருமணம் நடந்தாலும் இனம்புரியாத ஏதோ ஒரு கவலை கணவன்-மனைவிக்குள் சூளும்.

குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பம் அமைய தடை உண்டாகும்.

காதல் செய்வோர் கவனமுடனிருப்பது நல்லது.

பணியில் இருப்போர் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சொந்த தொழில் செய்வது செய்பவர்கள் புதிதாக கிளையை ஆரம்பிக்க வேண்டாம் .அதுபோல் புது தொழிலும் புதிய முதலீட்டில் தொடங்க வேண்டாம்.

ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில், ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து களத்திர தோஷம் இருந்தால் இக்காலகட்டங்களில் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இல்லை என்றால் விவாகரத்து போன்ற விஷயங்கள் ஏற்படலாம்.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்::::

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் மிக கவனமாக இருப்பது நல்லது.

குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :::

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.

கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More