துலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020
நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் துலாராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
துலா ராசிக்கு சனிபகவான் தற்போது 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
4ம் இடத்தில் தன் சொந்த வீட்டில், ஆட்சி ஆகும் சனி, அங்கு உத்திராடம் ,திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -6ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 1ம்இடத்தையும் பார்ப்பார்.
துலாராசிக்கு அர்தாஷ்டம சனி ஆரம்பம்.
அஷ்டம சனியில் பாதி, அர்தாஷ்டம சனி என்பார்கள்.
அர்த்தாஷ்டமச் சனி என்பது சுமாரான அமைப்பே. இதில் மாற்றுக் கருத்து இல்லை .
நாலாம் இடமான வீடு, மனை, வண்டி வாகனம் மற்றும் சுக ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் இவை அனைத்தையும் பாதிப்பார்.
நாலாம் இடத்தில் ஆட்சியாகும் சனி அங்கிருந்து ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படலாம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வேலைகள் கடினமாக இருந்தாலும், கனிவுடன் கையாள்வது நல்லது.
புதிய தொழில் தற்போது பெரிய முதலீட்டில் ஆரம்பிக்க வேண்டாம். ஒரு வருடடம் ஆகட்டும்.
சனி தற்போது வந்திருக்கும் இடம் சுக ஸ்தானம் என்பதால் உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் தேவை.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று அதற்கேற்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
60 வயதைக் கடந்தவர்கள் குறிப்பாக எலும்புகள், மூட்டுகள் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக அதற்கேற்ற சிகிச்சை பெறுவது நல்லது.
சனி மூன்றாம் பார்வையால் 6-ம் இடத்தைப் பார்ப்பதால் கடன்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். இருந்தாலும் கடனை வாங்கி கடனை அடைப்பது கூடாது.
கோர்ட் கேஸ் விவகாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் மனதில் இனம்புரியாத கவலைகள் சுற்றி வந்து கொண்டே இருக்கும்.
உடல் அலைச்சல் அதிகமாகும். அதிக உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது நல்லது
வரும் குரு பெயர்ச்சிக்குப் பின் சனியின் கெடுபலன்கள் பாதிக்குமேல் கண்டிப்பாக குறையும். அந்த காலகட்டங்களில் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்குவதால் சுபச்செலவுகள் ஏற்படும்.
புதிதாக வீடு கட்ட விரும்புவோர் அடுத்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஆரம்பிக்கவும். அதுபோல் வாகனங்களை மாற்ற விரும்புவோர் அந்த காலகட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளவும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அரங்கேருவதில் எந்த தடையும் இல்லை.
மணமான மணமக்களுக்கு, மறுவருடம், மழலை பாக்கியம் உண்டு.
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அக்கறையுடன் படிப்பது நல்லது.
புதிதாக அடமானம் வைப்பது, ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடாது.
உங்கள் சுய ஜாதகத்தில் கெடுதலான தசாபுத்திகள் இருப்பின் வண்டி வாகனங்களை வேகமாக இயக்குவதை தவிர்க்கவும்.
சிலருக்கு தந்தைக்குக் கருமம் செய்ய வேண்டிய கால சூழ்நிலைகளும் வரலாம்.
4-ஆம் இடமான தாயார் ஸ்தானத்தில் சனி ஆட்சி பெறுவதால் தாயாரின் உடல் நிலையிலும் கவனம் தேவை.
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எல்லாம் சுபமாக அமையும்.
குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலம் நல்ல மாற்றம் பெரும்.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.
கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.
சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய
Comments are closed.